திருப்பூரில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது ஆட்டோ மோதிய விபத்து: 2 பேர் உயிரிழப்பு


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது பயணிகள் ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் - பொல்லிகாளிபாளையம் அமராவதிபாளையத்தை சேர்ந்தவர் ரவி (25). இவர் புதிய பயணிகள் ஆட்டோ ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன் வாங்கியிருந்தார். ஆட்டோவில் பொருத்துவதற்கான நம்பர் பிளேட் வாங்குவதற்கு போய்மபாளையத்துக்கு நேற்று மாலை சென்றிருந்தார். தொடர்ந்து நம்பர் பிளேட்டை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தபோது, நெசவாளர் காலனி பகுதியில் அதிவேகமாக ஆட்டோவை ரவி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் மீது மோதியது.

விபத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரி (37), திண்டுக்கல்லை சேர்ந்த திலகா (70) திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்த தம்பதி அப்துல்லா (45) மற்றும் பல்கிஷ்நிஷா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதில் மூதாட்டி திலகா (70) மற்றும் அப்துல்லா (45) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.29) அதிகாலை இறந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ரவி மீது, திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

x