புதுச்சேரி: புதுச்சேரியில் 2025-26 நிதியாண்டு முதல் 2029-30 நிதியாண்டு வரையிலான வருவாய் மற்றும் மின்கட்டண நிர்ணயம் தொடர்பாக கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஆணையத்தின் தலைவர் அலோக் டாண்டன், உறுப்பினர் ஜோதி பிரசாத் ஆகியோர் தலைமையில் தாங்கினர். இதில் எம்எல்ஏ நேரு(எ) குப்புசாமி, பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் மின்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் புதுச்சேரி மின்துறை விவரங்களை பவர் பாயிண்ட் விளக்ககாட்சி மூலம் மின்துறை அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து நேரு எம்எல்ஏ பேசும்போது, புதுச்சேரியில் மின் கட்டணம் என்ற பெயரில் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதன்மூலம் நூதன கொள்ளை நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவாக உள்ளது என்று தமிழகத்தோடு ஒப்பிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மின்கட்டணம் மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு அப்படி வசூலிப்பதில்லை. மின்கட்டண ரசீதில் 10 கட்டணம் வரை வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்படுவதில்லை. மின் கட்டமைப்பு படுமோசமாக உள்ளது. இதனால் மின் டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்காக சுதேசி மில் வளாகத்தில் உள்ள இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மின்தடை ஏற்படாத இல்லாத நாளே இல்லை. புதுச்சேரியில் புதைவட மின்கேபிள் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தெருவிளக்குகள் எரியவில்லை. மின்மாற்றி, மின் கம்பிகள், மின்சாதனம் அனைத்துமே பழைய பொருட்கள் தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின்துறை குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் இதனை யாரும் காதில் வாங்கியது போல் தெரியவில்லை.
மின்துறை லாபத்தில் இயங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்துறை தனியார் மயமாக்கப்பட உள்ளதா? அல்லது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தனியார் மயமாக்கலை கைவிடப்போகிறீர்களா? என்பதை கூற வேண்டும் என பேசி முடித்தார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பினர், பொதுமக்கள் புதுச்சேரியில் அதிகம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் தெரியாதவர்கள் கருத்துக்களை கேட்கின்றனர். இதனால் பொதுமக்கள் கூறும் கருத்துக்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கூட்டத்துக்கு தமிழ் தெரிந்தவர்கள் வர வேண்டும். மின்கண்டன பில்லில் பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மின்கட்டண பில் தமிழில் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. இதனால் மக்களால் அந்த கட்டணம் எதற்கு வசூலிக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. மின்கட்டண பில்லை தமிழில் கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் கருத்துக்கேட்பு கூட்டம் பெயருக்கு என்று குறைவான இடங்களில் நடத்துகின்றனர். ஆனால் மின்கட்டணம் மட்டும் ஒவ்வொரு ஆண்டு உயர்த்தப்படுகிறது.
கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தில் மக்கள் கூறிய குறைகள் ஏதேனும் ஒன்று நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா? அப்படி செய்திருந்தால் அதற்கான அறிக்கையை கொடுங்கள் என்று சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராக தங்களின் கருத்துக்களை பேசினார்.