மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை கே.கே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டாக செயல்படுகிறது. இப்பள்ளியில் பிரி-கேஜி, யூகேஜி, எல்கேஜி மற்றும் தினமும் குழந்தைகள் பராமரிப்பு வகுப்புகள் நடக்கின்றன. இது தவிர, கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது.
மதுரை திருநகரை சேர்ந்த திவ்யா என்ற பெண் இப்பள்ளியை நடத்துகிறார். மதுரை கே.கே.நகர், அண்ணா நகர், பி.பி. குளம் உள்ளிட்ட பகுதிகளை ச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளும் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவரும், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியரு மான அமுதன் - சிவ ஆனந்த தம்பதியரின் 4வயது மகள் ஆரூத்ரா படித்தார். வழக்கம் போன்று நேற்று காலை ஆரூத்ராவை பள்ளிக்கு அழைத்து வந்து விடப்பட்டாள். அங்கு பணிபுரியும் ஆயாக்கள், ஆசிரியை கள் குழந்தைகளுக்கு வகுப்பு, பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இதற்கிடையில் காலை சுமார் 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் விளையாடிய ஆருத்ராவை திடீரென காணவில்லை.
பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு வீரரகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்து அக்கம், பக்கத்தினரும் அங்கு திரண்டனர். கார் ஓட்டுநர் ஒருவர் உள்ளே சென்று சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த குழந்தையை மீட்டார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனாலும், குழந்தை உயிரிழந்தது தெரிந்தது. இதன்பின் குழந்தையின் உடல் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, கோட்டாட்சியர் சாலினி, காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் பள்ளிக்கல்வி, வருவாய்துறை அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் குழந்தை விழுந்து இறந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். 8 அடி ஆழமுள்ள தொட்டியில் ஒரு அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் இருந்தாலும் தொட்டி நேற்று மூடப்படாமல் இருந்துள்ளது. பள்ளி வளாகத்திற்கு சில விதிமுறையை மீறலும் இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பள்ளியை இழுத்து பூட்டிய கோட்டாட்சியர் பள்ளிக்கு சீல் வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா, ஆசிரியைகள், ஊழியர்கள் என, 7 பேரை அண்ணா நகர் போலீஸார் பிடித்துச் சென்று விசாரிக்கின்றனர். மதுரையில் இசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.