ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி இறங்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் வழியாக மைசூரு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை புலிகள் காப்பகத்தின் வழியே செல்கிறது. வன விலங்குகளின் நலன் கருதி இரவு நேரத்தில் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில், இயல்பாக வனவிலங்குகள் இந்த சாலை ஓரத்தில் நடமாடுவதும், சாலையைக் கடப்பதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை படுத்து இருப்பதையும் வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: பூனை இனத்தைச் சேர்ந்த சிறுத்தையின் வேட்டையாடும் தன்மையானது, சிங்கம், புலி இவற்றில் இருந்து மாறுபட்டதாகும். தன்னை விட பெரிய விலங்குகளை வேட்டையாடுவதை சிறுத்தை தவிர்த்து விடும். தனக்கு நிகரான மற்றும் தன்னை விட எடை குறைவான விலங்குகளை மறைந்திருந்து தாக்கி இரையாக்கும் தன்மை சிறுத்தைக்கு உண்டு.
இத்தகைய தன்மை கொண்ட சிறுத்தையானது திம்பம் மலைப்பாதையில் நடமாடுவது கண்டறியப் பட்டுள்ளது. எனவே, இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டும். மலைப் பாதையில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்க கூடாது. பாதையில் வன விலங்குகள் கடந்து சென்றால், அவற்றை தொந்தரவு செய்யக் கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.