புதுச்சேரியில் உள்ள 15 கடலோர மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு


புதுச்சேரி: மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள 15 கடலோர மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் குறித்து இன்று கணக்கெடுப்பு நடந்து முடிந்தன. அடுத்து மீன்பிடிதுறைமுகத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மத்திய மீன்வள அமைச்சக உத்தரவின்படி அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மீன்பிடி தடைக்காலத்துக்குள் அனைத்து மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி அதற்கான இணையத்தள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகு, இயந்திரம் இல்லா பைபர் கட்டுமரங்களை கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்பணி இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து 15 மீனவ கிராமங்களிலும் கணக்கெடுக்கும் பணி இயக்குநர் முகமது இஸ்மாயில் தலைமையில் துணை இயக்குநர்கள் மீரா சாஹிப், கவியரசன், சாஜிமா ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. இப்பணியை மீன்வளத்துறை இயந்திரப்பிரிவு துணை இயக்குநர் ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார்.

இது தொடர்பாக இயக்குநர் கூறுகையில், "அனைத்து மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார், மக்கள் குழு, கோயில் நிர்வாகக்குழு பைபர் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்டமாக இதேபோன்று மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் கள ஆய்வில் கணக்கெடுப்பு நடத்துவோம். அதையடுத்து இணையத்தள பக்கத்தை புதுப்பிப்போம்" என்றார்.

x