திரைப்பட பாடகர்களாக உருவான அரசு பள்ளி மாணவர்கள்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சூப்பர் முயற்சி!


விருதுநகர்: மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் முறைப்படி பயிற்சி பெற்று திரைப்பட பின்னணி பாடகர்களாக உருவாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்றாக பாடல் பாடும் திறன் உள்ள சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த மாவட்ட ஆட்சியர் வீ.பா.ஜெயசீலன் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி, கடந்த ஜனவரியில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை வரவழைத்து அவர்களின் பாடும் திறன் சோதித்தறியப்பட்டது.

சிறப்பாக பாடிய 20 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் குழுவினர் மூலம் இணைய வழியில் பாடல் பாடும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த 20 பேரை வைத்து அடுத்த மாதம் ஓர் இசைக் கச்சேரியை அரங்கேற்றம் செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், 20 மாணவர்கள் கொண்ட குழுவில் சிறந்த 6 மாணவர்களை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தேர்ந்தெடுத்து தமிழ் திரைப் படம் ஒன்றில் ஒரு பாடல் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அந்த பாடலுக்கான பாடல் பதிவு சென்னை திருவான்மியூரில் உள்ள இசை பதிவுக் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிஏசிஎம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விஷ்வா, ஸ்ரீ ஹரி, ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அம்மனி அம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவதர்ஷினி, சிவகாசி கலைமகள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யாழ்நங்கை, விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆஷா, பாரதி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகள் சென்னை சென்று வருவதற்கான போக்குவரத்துக் கட்டணம், உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.

x