வைகை ரயிலில் பார்சல் இட்லிக்கு கூடுதலாக பணம்: விழுப்புரம் பயணிக்கு ரூ.30,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு


விழுப்புரம்: வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், கடந்த 2022ம் ஆண்டு செப். 23 அன்று, மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, விழுப்புரத்துக்கு பயணித்துள்ளார்.

திருச்சி ரயில் நிலையம் வந்ததும், முதல் நடைமேடையில் ரயில்வே அனுமதி பெற்று, உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்த தனியார் கேட்டரிங் நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்ட இட்லியை தலா ரூ.30 வீதம் 2 செட் மற்றும் 2 வடை ரூ.20 என மொத்தம் ரூ.80-க்கு வாங்கியுள்ளார். இதற்கான ரசீது கேட்ட போது கேன்டீன் ஊழியர் தர மறுத்துள்ளார்.

மேலும் பார்சலை வாங்கி பார்த்த போது, ஒரு செட் இட்லியின் அதிகபட்ச விற்பனை விலை (எம்ஆர்பி) ரூ.26 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஆரோக்கியசாமி விற்பனையாளரை அழைத்து எம்ஆர்பி விலையை விட கூடுதலாக 8 ரூபாய் வாங்கியுள்ளீர்கள். அத்தொகையை திருப்பித்தர வேண்டும் என்று கேட்டுள்ளார். கேன்டீன் ஊழியர் அலட்சியமாக பேசிவிட்டு சென்றுள்ளார். மேலும் பார்சலில் சட்னி, சாம்பாரின் அளவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் அதைச் சாப்பிட்ட ஆரோக்கியசாமி, விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததும் அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம் இது குறித்து புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் கேட்டரிங் நிறுவன உரிமையாளரிடம் கூடுதலாக வசூலித்த 8 ரூபாயை திருப்பி வழங்கக் கோரி எழுத்துப் பூர்வமாக புகார் மனு அளித்துள்ளார். விசாரணை செய்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சம்மந்தப்பட்ட கேட்டரிங் உணவகத்திடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலித்துள்ளார்.

ஆனால் ஆரோக்கிசாமிக்கு கொடுக்க வேண்டிய 8 ரூபாயை கொடுக்கவில்லை. இதையடுத்து அவர், விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர்ந்தார். கேட்டரிங் நிறுவனம் தரப்பு மற்றும் ரயில்வே சார்பில் அதிகாரிகள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர் கூடுதலாக வசூலித்த பணத்தைக் கொடுக்காமல் புகார்தாரரை மன உளைச் சலுக்கு ஆளாக்கியமைக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் மற்றும் கூடுதலாக பெற்ற 8 ரூபாயை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் ரயில்வே கேட்டரிங் உரிமையாளர் இந்த பணத்தைச் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்கிட வேண்டுமென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x