ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2 மகள்களுடன், தாய் தீக்குளிக்க முயற்சி


ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது இரு மகள்களுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, நேர்முக உதவியாளர் (பொ) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் கீதா லட்சுமி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர். அதன்படி, மக்கள் குறைதீர்வு கூட்ட அலுவலக வளாகத்தில் 2 இளம்பெண்களுடன் அவரது தாய் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் கேனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையில், சோளிங்கர் வட்டத்தைச் சேர்ந்தவர் சுதா (40), இவரது இருமகள்களான ஜீவிதா (21), சண்முக பிரியா (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. சுதா தனது கணவர் வெங்கடேசனுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். ஆனால், அங்கு வந்தும் வெங்கடேசன் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதா தனது கணவர் மீது அளித்த புகார் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த அவர் மீது எங்கள் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

வாலாஜா வட்டம் தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் அளித்த மனுவில், "நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். ராணிப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத் தேர்வு எழுதி உள்ளேன். நான் உயர்கல்வி பயில சாதி சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் வரை பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, நான் உயர்கல்வி பயில சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்" என்றார். இதேபோல், மாவட்டத்தி ன் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொது மக்களிடமிருந்து மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. இதில், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

x