3வது குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் வேண்டும்: சட்டசபையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை


சென்னை: தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியக் கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த சூழலில், 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கும் தமிழ்நாடு அரசு சலுகை அளிக்க வேண்டும் என்று திமுக பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ மதியழகன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். மேலும், மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் பேசினார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றியதால் மக்களவை தொகுதிகள் மறுவரையறையில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ இப்படியான கோரிக்கையை வைத்துள்ளார்.

முன்னதாக, ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் போட்டியிட முடியும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

x