சென்னை: சட்டசபையில் இன்று முதலமைச்சரின் பதிலுரையின் போது 'ஊர்ந்து' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அந்த சொல்லை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசியதோடு, அந்தச் சாதனைகளால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வருமாறு: இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கருணாநிதி சொன்னார். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் ‘ஸ்டாலின் என்றால் சாதனை, சாதனை, சாதனை’ என்று சொல்லியிருப்பார். தலைவர் கலைஞர் இப்போது இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார் என்று யோசித்து திட்டங்களைத் தீட்டுகிறேன்.
கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டில் இருந்து தமிழகத்தை மீட்டு எல்லா துறைகளிலும் நம் மாநிலத்தைத் தலைநிமிரச் செய்துள்ளேன். இது சாதாரண சாதனை அல்ல. கடும் உழைப்பால் கிடைத்த சாதனை. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை பார்க்காத சாதனையை தமிழகம் படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளைப் படைத்துள்ளது.
தமிழகம் இந்தச் சாதனைகளை எல்லாம் சாதாரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள் இவற்றிற்கெல்லாம் இடையில் மாட்டிக் கொண்ட மனிதனைப் போல் ஒரு பக்கம் மத்திய அரசு, மறு பக்கம் ஆளுநர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று எல்லா தடைகளையும் கடந்து சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை. என்னைப் பொறுத்தவரை கொள்கையும், இயக்கமும் தான் முன்னிலை பெற வேண்டும். வலிமை பெற வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதனிடையே, முதலமைச்சரின் பதிலுரையின் போது 'ஊர்ந்து' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அந்த சொல்லை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. தவழ்ந்து, ஊர்ந்து என்று நான் யாரையும் குறிப்பிடவில்லை.உங்கள் மனதில் யாரையும் குறிப்பிட்டதாக நினைத்தால் நான் என்ன செய்வது?. உங்களுக்கு மனதில் உறுத்தினால் அவை குறிப்பிலிருந்து நீக்கலாம்” என்று தெரிவித்தார்.