சென்னை: குடியிருக்க வீடு கேட்டால் குடை கொடுப்பது தீர்வாகாது என்று தமிழக முதல்வரின் 110 அறிவிப்பு குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விமர்சனம் செய்துள்ளது.
இது குறித்து அந்த கூட்டணியின் மாநிலத் தலைவர் சி.அரசு, பொதுச் செயலாளர் சு.குணசேகரன், பொருளாளர் சே.நீலகண்டன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில், திருமணத்துக்கு வழங்கப்படும் முன்பணம் என்பது கடன் தான். சலுகை கிடையாது.
பணி நியமனங்கள் மிகவும் குறைந்து விட்ட நிலையில், போட்டித் தேர்வுகள் எழுதி அரசுப் பணியில் சேருபவர்கள் 95 சதவீதம் பேர் திருமணமானவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அறிவிப்பால் பயனடையவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவே இருக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களின் மகனுக்கோ, மகளுக்கோ திருமணக் கடன் வழங்கினால் கூட பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பை வெளியிடாதது மிகப்பெரிய ஏமாற்ற த்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருக்க வீடு கேட்பவர்களுக்கு குடை கொடுப்பது தீர்வாகாது. எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற குழு எதையும் அமைக்காமல், உடனடியாக அறிவிக்க வேண்டும். போராட்டங்கள் தீவிரமாகி அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கு முன்பு அரசு, இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சி.தங்கமணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முக நாதன் ஆகியோர் அரசின் அறிவிப்புகளை வரவேற்றுள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது, கரோனா காலத்தில் 24 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மீண்டும் வழங்குவது, மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 47 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்குவது குறித்து அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.