நடிகர் சிவாஜி சிலைக்கு விமோசனம்: திருச்சி பாலக்கரையில் இருந்து கண்டோன்மென்டுக்கு மாறுகிறது!


படம்:ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நிறுவப்பட்டு, 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி சிலையை, சோனா மீனா திரையரங்கு எதிரே வார்னர்ஸ் சாலையில் உள்ள சாலைப் பூங்காவில் நிறுவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் 2011ல் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. ஆனால், சிலையைத் திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை துணியைக் கொண்டு மூடப்பட்டது. அதன்பிறகு சிலை திறப்பு கிடப்பில் போடப் பட்டது. சிவாஜி சிலையைத் திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் சிலை திறக்கப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல் மிக்க பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சிலை அமைக்க நீதிமன்றம் அனுமதி தரவில்லை என காரணம் கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி கிழக்கு எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், சிவாஜி சிலை திறப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் அண்மையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சிவாஜி சிலை வேறு இடத்தில் பூங்காவுடன் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி, சோனா மீனா திரையரங்கு எதிரே வார்னர்ஸ் சாலையில் உள்ள பூங்காவுக்குள் சிவாஜி சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டு, அந்த இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, அந்த சிலை அமையவுள்ள இடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் இன்று (ஏப்.29) நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் வார்னர்ஸ் சாலை பூங்காவில் சிவாஜி சிலையை நிறுவ அனுமதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, ஓரிரு நாட்களில், பாலக்கரை ரவுண்டானாவில் மூடிக்கிடக்கும் சிவாஜி சிலை அகற்றப்பட்டு, இங்கு நிறுவப்பட்டு, விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த இடத்திலாவது சிவாஜி சிலையைத் திறக்க எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

x