வக்பு சட்ட திருத்தத்தால் ஏழை முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக மேம்படுவார்கள்: சேக் தாவூத் உறுதி


தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூத்

மதுரை: வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் நன்மை தெரியாமல், பாஜக கொண்டு வந்தது என்ற காரணத்துக்காகவே எதிர்ப்பது ஏற்புடையதல்ல என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூத் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை ஏற்கிறோம். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதேபோல், ஏழை மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட வக்பு சொத்தை பலர் அனுபவிக்கின்றனர். இது தொடர்பாக ஏற்கெனவே கோவை, வேலூர், சென்னையிலுள்ள முஸ்லிம் இளைஞர்களைச் சந்தித்து வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கினோம். மதுரையிலும் முஸ்லிம் இளைஞர்களிடம் விளக்கினோம்.

இந்தியாவில் மட்டும் 39 லட்சம் ஏக்கர் பரப்பில் வக்பு சொத்துகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு உதாரணமாக நீட், சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்கள். வக்பு சொத்துகள் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி அளவில் வருவாய் கிடைக் கிறது. இதனை எதிர்க்கும் பெரிய பணக்காரர்களான இந்தி நடிகர்கள் வக்பு சொத்தை அபகரித்து அனுபவிக் கின்றனர்.

எங்களை இளைஞர்களை சந்திக்க விடாமல் இஸ்லாமிய ஜமாத்தினர் தடுக்கின்றனர். இந்தியா முழுவதிலும் வக்பு திருத்தச் சட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைப்பதுடன், வக்பு சொத்துகளை அனுபவிப்பவர்கள் யார் ? யார் ? என இணையதளத்தில் பதிவிட வேண்டும். 2013ம் ஆண்டு வரை காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் இருந்தவர்கள் வக்பு சொத்தை கொள்ளையடித்து பல கோடி சம்பாதித்துள்ளனர்.

இச்சட்டத்தின் நன்மை தெரியாமல், பாஜக கொண்டு வந்தது என்ற காரணத்துக்காகவே வக்பு திருத்த சட்டத்தை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. இச்சட்டம் அமலுக்கு வந்தால் வக்பு சொத்துகள் மீட்கப்பட்டு, ஏழை மக்கள் பயன்பெறுவர். பொருளாதார ரீதியிலும் முஸ்லிம்கள் மேம்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

x