புதுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (68). திருப்பூர் கல்லாங்காட்டில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், பிரியாணி சாப்பிட்ட போது தொண்டையில் கோழி இறைச்சியின் எலும்பு சிக்கியது. வலியால் துடித்த அவர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு வந்தார்.
காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் யோகானந்த் தலைமையில், உதவி பேராசிரியர் ரகுநாதன், மருத்துவர்கள் சுரேஷ் ராஜ் குமார், திவ்ய பிரியா, மயக்கவியல் துறைத் தலைவர் பூங்குழலி, உதவி தலைவர் ராதா, உதவி மருத்துவர்கள் செல்வக்குமார், பிராங்கிளின் ஆகியோர் அடைக்கலத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு தொண்டையில் இருந்த கோழி இறைச்சியின் எலும்பை மருத்துவக் குழுவினர் அகற்றினர். நோயாளியை பத்திரமாக மீட்ட அறுவை சிகிச்சைக் குழுவுக்கு டீன் (பொ) பத்மினி பாராட்டு தெரிவித்தார்.