மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? - எச்சரிக்கை குறிப்புகள்


கோவை: மயோனைஸ் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமைக்கப்படாத முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உடல் நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதையடுத்து, இதன் தயாரிப்பு மற்றும் விற்பனையை தமிழக அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை மாநிலம் முழுவதும் ஏப்.8 முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு அமலாகும் என தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி, சமைக்கப்படாத முட்டையில் உள்ள சால்மொனல்லா போன்ற பாக்டீரியாக்கள், மனித உடலில் தீவிரமான தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருப்பதால், பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்தத் தடை அமல்படுத்தப் பட்டுள்ளது.

மயோனைஸ் என்பது முட்டை வெள்ளை கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்கள் கலந்த ஒரு உணவுப் பொருள். சாலமொனெல்லா என்னும் பாக்டீரியா, மாசு படிந்த ஓட்டினை கொண்ட சமைக்கப்படாத முட்டையை மயோனைஸ் தயாரிக்க கையாளும்போது, கிருமி தொற்று உண்டாக வாய்ப்பு உண்டாகிறது. சாலமொனல்லா டைபிமுரியம், சாலமொனல்லா என்டரிடிடீஸ், லிஸ்டிரியா மோனோ சைட்டோ ஜீன்ஸ் போன்ற கிருமிகளால் உடல் நலத்திற்கு பல்வேறு வகைகளில் தீங்கு ஏற்படும்.

சாலமொனெல்லா தொற்றின் அறிகுறிகளில் நீர்க்குடல் பேதி, வாந்தி மற்றும் வயிற்று வலி அடங்கும். அதேபோல், ஈ கோலை கிருமி குடல் பாதிப்புகளுடன் மட்டுமல்லாது, மலம் மூலம் உடலுக்குள் சென்றால் சிறுநீர் பாதை மற்றும் பிற உடல் உறுப்புகளிலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இதையடுத்து மயோனைஸ் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு முழுமையாக தடை விதித்தது. அண்மைக் காலமாக ஷவர்மா கடைகள், தந்தூரி போன்ற அசைவு உணவுகள் மற்றும் பிற அசைவ உணவகங்களில், சமைக்கப்படாத முட்டையைக் கொண்டு நேரடியாக தயாரிக்கப்பட்டு மயோனைஸ் பரிமாறப்படும் நிலை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

பல உணவு வணிக நிறுவனங்கள் மயோனைஸ் தயாரிக்க சமைக்கப்படாத முட்டையை பயன்படுத்து கின்றன. சமைக்கப்படாத முட்டை, முறையற்ற உணவு தயாரிப்பு மற்றும் முறையற்ற சேமிப்பு வசதிகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதால், தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையாளர் வெளியிட்ட உத்தரவின்படி, அனைத்து உணவகங்கள் மற்றும் உணவுத் தொழில் நிறுவனங்களிலும் சமைக்கப்படாத முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாறுதலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் உணவு நிறுவனங்களை கள ஆய்வு மேற்கொண்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் படி உரிய துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஷவர்மா, தந்தூரி, அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சமைக்கப்படாத முட்டையை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கும் முறையை மேற்கொள்ளக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

x