புதுவையில் தங்கியிருந்த பாகிஸ்தானியர் 2 பேர் வெளியேற உத்தரவு


புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர் 2 பேரை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விசா காலாவதியானதால், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர்களை வெளியேற காலக்கெடுவை மத்திய அரசு நிர்ணயித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானியர் இருவர் புதுச்சேரியில் தங்கியிருந்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39), கடந்த 2013-ம் ஆண்டு, அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியா பானு(38) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமான பின்னர் பஷியா பானு புதுச்சேரியில் வசித்து வந்தார்.

இதேபோல். பஷீர்(65) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து விசாவில், புதுச்சேரி பிராந்தியமான கேரளம் அருகேயுள்ள மாஹேவுக்கு வந்தார். அதன்பின், அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

பஹல்காம் சம்பவத்தின் காரணமாக தற்போது பஷியா பானு, பஷீர் ஆகியோரை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இருவரின் விசா ஏற்கெனவே காலாவதியானதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாஹே போலீஸார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்

x