சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, 6 மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சிகாலத்தில் 2006 - 2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி பி. சுசீலா, மகனும் தற்போதைய பழநி எம்எல்ஏ-வுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்றும், சொத்துகளை முறையாக கணக்கீடு செய்யாமல் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதால்தான் திண்டுக்கல் நீதிமன்றம் தங்களை விடுவித்து உத்தரவிட்டதாக வாதிடப்பட்டது. பதிலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை நகல்கள் குறித்தும், எப்ஐஆர் குறித்தும் விளக்கி வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், ‘‘வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து தினந்தோறும் விசாரணை நடத்தி வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்