மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனக் காப்பகத்தில் வாகனங்கள் நுழையும் பகுதியில் மட்டுமில்லாது வெளியேறும் பகுதியிலும் பெறும் கட்டணத்துக்கு ‘ரசீது’ கொடுக்க மாநகராட்சி ஆணையர் சித்ரா ‘பிஓஎஸ்’ இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த நடவடிக்கை எடுக்கும் முன்பு வரை, வாகனங்கள் வெளியேறும் பகுதியில் ரசீது வழங்காமல் இருந்ததால் மாநகராட்சிக்கு ஏற்பட்டு வந்த வருவாய் இழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இரவு, பகல் என எந்நேரமும் பயணிகள் கூட்டம் காணப்படும். வெளியூர் செல்வோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்ல பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி காப்பகம் செயல்படுகிறது.
இக்காப்பகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் நிறுத்தும் வசதி உள்ளது. இந்த காப்பகத்தை கடந்த காலத்தில் தனியாருக்கு மாநகராட்சி ஒப்பந்தம் விட்டிருந்தது. தற்போது கடந்த ஓராண்டாக டெண்டர் முடிந்ததால் மாநகராட்சியே எடுத்து நடத்தி வருகிறது.
மாநகராட்சி வருவாய்ப் பிரிவு ஊழியர்கள், நேரடியாக காப்பகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் பெற்று வந்தனர். 12 மணி நேரம் இரு சக்கர வாகனத்தை நிறுத்த ரூ.8 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தைவிட கூடுதலாக நிறுத்தும் வாகனங்களுக்கு ஒவ்வொரு 12 மணி நேரத்துக்கு ஒருமுறையும் கூடுதலாக ரூ.8 வசூலிக்கப்படுகிறது.
காப்பகத்தில் வாகனங்கள் நுழையும் பகுதியில் இரு ஊழியர்கள், வாகனங்களின் எண்களை பதிவு செய்து, முதல் 12 மணி நேரத்துக்கு முன்கூட்டியே ரூ.8 கட்டணம் பெற்று ‘ ரசீது’ கொடுக்கிறார்கள். இதற்காக வாகனங்கள் நுழையும் இடத்தில் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மூலம் நேரடியாக நிர்ணயிக்கப்படும் ‘பிஓஎஸ்’ இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. திரும்பி பொதுமக்கள் வாகனங்களை எடுக்க வரும்போது, காப்பகத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் முதல் 12 மணி நேரத்துக்கு பிறகு கூடுதலாக நிறுத்தப்படும் ஒவ்வொரு 12 மணி நேரமும் கணக்கீட்டு அங்குள்ள ஊழியர்கள் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
நுழைவு பகுதியில் முதல் 12 மணி நேரத்துக்கு கட்டணம் பெற ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு ரசீது வழங்குகிறார்கள். ஆனால், வெளியேறும் இடத்தில் ‘பிஓஎஸ்’ மிஷன் இல்லாததால் வாகனங்களை எடுத்து செல்லும்போது ஊழியர்கள் பெறும் கட்டணத்துக்கு ரசீது வழங்குவதில்லை. இதனால் இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை மாநகராட்சிக்கு செல்கிறதா என்ற சர்ச்சை கடந்த ஓராண்டாகவே எழுந்த வந்தது.
இந்நிலையில், ரசீது வழங்காமல் முறைகேடாகப் பெறும் தொகை ஆளும் கட்சியினருக்குச் செல்வதாக கூறப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சித்ரா பார்வைக்கு புகார்கள் சென்றதையடுத்து அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வாகனங்கள் வெளியேறும் பகுதியில் கூடுதலாக பெறப்படும் தொகைக்கு ரசீது வழங்காததை கண்டறிந்து ரசீது வழங்க ‘பிஓஎஸ்’ மிஷின் வைக்க நடவடிக்கை எடுத்தார். அதன் அடிப்படையில் தற்போது வாகனங்கள் நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும் ‘ரசீது’ கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கையால் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டை இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.