மதுரை: மதுரையில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஒலிக்கும் கள்ளழகர் வருகைக்கான வாராரு, வாராரு இசையை நீக்க வலியுறுத்தி இஸ்லாமிய இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் தாஜூதீன். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு ஒன்றை கொடுத்தார். அதன் விவரம்: சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த கால் நடப்பட்டு விழா தொடங்கியது. இரு வாரத்திற்கு மதுரை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் சங்கமிக்க உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவை காண மதுரை , சுற்றுவட்டார பகுதியினர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் மக்கள் வருவர். கள்ளழகர் பெருமான் வருகையை எதிர்நோக்குவதும், வரவேற்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவர். கள்ளழகர் வரவேற்கும் விதமாக ‘கள்ளழகர்’ என்ற திரைப்பட பாடலான வாராரு, வாராரு, அழகர் வாராரு என்ற பாடல் பக்தர்கள், மதுரை மக்கள் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்தும்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு தெருவிலும் வலம் வரும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் சேகரிப்பு வாகனங்களில் குப்பைகளை கொண்டு வரும் வகையில் மக்கள் கவனம் ஈர்க்கும் விதமாக வாராரு, வாராரு பாடல் இசையின் பல்லவி ஒலிக்கப்படுகிறது.
சித்திரை திருவிழாவின்போது, இது உள்ளூர், வெளியூர் பக்தர்களை சங்கடப்பட வைக்கும். மங்களகரமான சுவாமி வருகையின்போது, வரவேற்கும் இசை குப்பைகளை சேகரிக்கும் வாகன வருகை அறிவிப்பாக ஒலிப்பது சகோதர உறவுகளை மனநோகச் செய்யும். திடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகன வருகை அறிவிப்புக்கென ஒலிக்கும் வாராரு, வாராரு பாடல் இசையை மாற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.