மதுரை: தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என நாட்டை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜே.ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது: உலகத்தில் எந்த தேசத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் எப்போதும் சாதகமானதாக இருந்ததில்லை. இத்தகைய செயல்களில் ஈடுபடும் அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நாடுகள் சர்வதேச அளவில் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, தீவிரவாதத்தில் ஈடுபடும் அனைவரும் தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.
உயிர் பலியுடன் பெறப்படும் வெற்றி, நிலையான வெற்றி அல்ல. அமைதியான வழியில் நடைபெற்ற போராட்டங்களே நீடித்த வெற்றியைத் தருகின்றன. ஜனநாயக முறைப்படி பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணுவதுதான் சாலசிறந்த வழிமுறையாகும். இதுபோன்ற தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது. பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கப்படும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளால் தாக்குதல்களைத் தடுக்க முடியாதது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு என்பது அரசின் முதன்மை பொறுப்பு. அந்தப் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்று செயல்பட வேண்டும். மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அறிவுத்திறனும், ஒழுங்கும், ஒற்றுமையும் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட அரசு உறுதிபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.