கல்லணைக் கால்வாயில் ரூ.3 கோடியில் புனரமைப்பு பணிகள் மும்முரம்: 25 டன் குப்பைகள் அகற்றம்


படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சை: கல்லணைக் கால்வாயில் ரூ.3 கோடியில் எஞ்சியுள்ள புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், தஞ்சாவூர் மாநகரில் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேங்கியுள்ள 25 டன் குப்பையை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் கல்லணைக் கால்வாய் எனப்படும் புது ஆறு கடந்த 1934-ம் ஆண்டு ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. இந்த ஆறு மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு இந்த ஆற்று நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் முன்பு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

காலப் போக்கில் ஆற்றின் கரைகள் பலவீனமாக இருந்ததால் 3 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும், கடைமடைப் பகுதிக்கு விரைந்து தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் கல்லணைக் கால்வாய் ஆற்றை புனரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே பல இடங்களில் ஆற்றில் உள்ள இரு கரைகளும், ஆற்றுக்குள்ளும் சிமென்ட் கான்கீரிட் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் இருபது கண் பாலம் முதல் சாந்தப்பிள்ளைகேட் பாலம் வரை பணிகள் நடைபெறாமல் இருந்தன. இதையடுத்து, இந்த ஆற்றில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது ஜன.28-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டதால், தற்போது புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி, ஆற்றின் இரு கரைகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, ஆற்றினுள் தேங்கியுள்ள கழிவுநீர், குப்பை, மண் திட்டுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்காக பொக்லைன், புல்டோசர்கள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில், தஞ்சாவூர் இர்வின் பாலம் முதல் சாந்தப்பிள்ளைகேட் பாலம் வரை ஆற்றினுள் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற ஏதுவாக அவை ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான காலி மதுபாட்டில்கள் கிடப்பதால், அவை உடைந்து புல்டோசர்களின் டயர்கள் கிழிந்து அடிக்கடி பஞ்சராவதால், இந்த பணி சவாலாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுலா ஆய்வு மாளிகை எதிரே ஆற்றின் கரைகளில் ஏற்பட்ட வெடிப்புகள், சேதங்களை தொழிலாளர்கள் சீரமைத்து வருகின்றனர்.

மே இறுதியில் பணிகள் நிறைவடையும்: இது குறித்து கல்லணைக் கால்வாய் பொறியாளர்கள் கூறியது: கல்லணைக் கால்வாயை புனரமைக்கும் பணியில் தற்போது கல்லணை தலைப்பு பகுதி, தஞ்சாவூர் மாநகரம், புதுப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆற்றின் இருபுற கரைகள், உள்தளம், மதகு, படித்துறைகள் சீரமைக்கப்படும்.

தஞ்சாவூர் சாந்தப்பிள்ளைகேட் அருகே உள்ள சைபனிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சைபனில் தற்போது கழிவு நீர் செல்வதால், அவை ஆற்றில் கலக்காதவாறு கட்டமைப்பு பலப்படுத்தப்பட உள்ளது. ஆற்றில் குப்பை மிகஅதிமாக உள்ளது. இதில் காலி மதுபாட்டில்கள் அதிகமாக காணப்படுகிறது. இவற்றை யும் அகற்றி வருகிறோம். மே மாதம் இறுதிக்குள் புனரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்றனர்.

x