தஞ்சாவூர்: ரூ.3.5 கோடியில் சீரமைக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபம் ஏப்.30-ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.
தஞ்சாவூரில் 1995-ம் ஆண்டு 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, புதுக்கோட்டை சாலைக்கும், வல்லம் நெ.1 சாலைக்கும் இடையே மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்கு அருகில் 3.23 ஏக்கரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. 72 அடி உயர கோயில் கோபுரம் வடிவில் அமைக்கப் பட்டுள்ள இந்த மண்டபத்தில் பொதுமக்கள் ஏறி, நகரின் அழகை ரசிக்கலாம். இந்த வளாகத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் குதிரையில் பறக்கும் வெண்கலச் சிலையும் உள்ளது.
மணிமண்டபத்தில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே இருக்கைகள், செயற்கை நீருற்று, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மணிமண்டபத்தின் கீழ் தளத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணி மண்டபத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த மக்களும் அதிகளவில் வந்து சென்றனர். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, மணிமண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2023, அக்டோபர் மாதம் சீரமைப்புப் பணிகள் தொடங்கின. இதையொட்டி, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ரூ.3.5 கோடியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தன.
இதையடுத்து, மணிமண்டபத்தை பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, ஏப்.30ம் தேதி உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் மணி மண்டபம் திறக்கப் படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.