சிவகங்கை: திருப்புவனம் அருகே ஆட்சியர் உத்தரவிட்டும், அதிகாரிகள் அலட்சியத்தால், சாலை அமைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூர் ஊராட்சி சம்பட்டிமடையில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்கள் கல்வி, மருத்துவம், பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 2 கி.மீ். தூரத்தில் உள்ள பழையனூர் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். பழையனூர் கிராமத்துக்குச் சென்று வர, பழையனூர் கண்மாய் கரை பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் கண்மாய் கரை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் நடந்து செல்லவோ, இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லவோ முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் அவர்கள் குருந்தங்குளம், ஆனைக்குளம், அழகுடையான் வழியாக 7 கி.மீ. சுற்றிச் செல்கின்றனர். இதையடுத்து, நூறு நாள் வேலைத் திட்டத்தில் கண்மாய் கரையில் சம்பட்டிமடைக்கு மெட்டல் சாலை அமைக்க கடந்த ஆண்டு அக்டோபரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து சம்பட்டிமடை கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் இருந்து பழையனூர் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதில் 1 கி.மீ. பழையனூர் கண்மாய் கரை வழியாகச் செல்ல வேண்டும். இச்சாலைக்கு 2021-ம் ஆண்டு நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. உரிய காலத்தில் பணி தொடங்காததால் நிதி திரும்பிச் சென்றது.
தொடர்ந்து 2024 அக்டோரில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் மெட்டல் சாலை அமைக்க ஆட்சியர் அனுமதி கொடுத்தார். ஆனால், பொதுப்பணித்துறை அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாங்களே ரூ.30 ஆயிரம் செலுத்தி அனுமதி பெற்றுக் கொடுத்தோம். ஆனால் அதன் பின்னரும் ஊரக வளர்ச்சித் துறையினர் பணியை தொடங்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘உரிய நேரத்தில் பொதுப்பணித் துறையினரின் தடையின்மை சான்று கிடைக்கவில்லை. இதனால் பணியை தொடங்க முடியவில்லை. இனி மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரித்து ஆட்சியரிடம் அனுமதி பெற்று தான் பணியை தொடங்க முடியும்’ என்றனர்.