ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி நுழைவாயில் அருகே மது, கஞ்சா விற்பனை: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி நுழைவாயில் அருகே சிலர் சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனை செய்வதாகவும், இதனால் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பானாங்குளத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி நுழைவாயில் அருகே தனியார் ஒருவர் கடை கட்டியுள்ளதோடு, பள்ளி நுழைவாயில் கதவை அடைத்து சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து பானாங்குளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், ‘பானாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நுழைவாயில் அருகே தனியார் ஒருவர் தனது கடையில் ஏசி மதுக்கூடம் அமைத்துள்ளார். யாராவது தட்டிக்கேட்டால் மிரட்டுகிறார்கள். மேலும், பள்ளி நுழைவாயில் முன் சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனை செய்கிறார்கள். இதை வீடியோ பதிவு செய்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் சமர்ப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பள்ளி நுழைவாயில் கதவு பூட்டப் பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் அனைவரும் கண்மாய் கரை வழியாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

x