ராமநாதசுவாமி கோயில், உப கோயில்களில் ரூ.207 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள்: சேகர் பாபு தகவல்


ராமநாதபுரம்: ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ், ரூ.207 கோடி மதிப்பீட்டில் 37 பணிகள் ராமநாதசுவாமி மற்றும் உப கோயில்களில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் நேற்று சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர் பாபு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கடற்கரைக்கு மிக அருகே அமைந்துள்ளது. இதனால் கடல் காற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ், ரூ. 207 கோடி மதிப்பீட்டில் 37 பணிகள் ராமநாத சுவாமி மற்றும் உப கோயில்களில் நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும்போது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் முழுமை பெறும்.

ராமேசுவரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து இந்துசமய அறநிலையத் துறைச் செயலர், அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு அடுத்த மாதம் ஆய்வு செய்ய உள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விடுமுறை நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் பெரும் அளவு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோயிலுக்கு வந்து செல்வதால், உள்ளூர் மக்கள் குறிப்பிட்ட அளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைகள் எதுவும் ஏற்படாமல் ஏற்பாடு செய்யப்படும்.

கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப் பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் கோரிக்கைகளைப் பதிவிடலாம். அவை பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். புதிய அர்ச்சகர்களை பணியமர்த்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று அர்ச்சர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

x