விருதுநகர் நரிக்குடியில் புதர்மண்டிய பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை: பல லட்ச ரூபாய் வீண்!


விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை புதர் மண்டிக் கிடக்கிறது. கட்டிட சுவர்களில் மரங்கள் வளர்ந்துள்ளதோடு, சமுக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

நரிக்குடியில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தின் பின் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொ்நதமான ஆய்வு மாளிகை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த ஆய்வு மாளிகை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. பொதுப் பணித் துறை அலுவலர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆய்வு மாளிகை பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இதனால், புதர்மண்டிக் கிடக்கிறது. கட்டிடத்தின் முன்பக்க நுழைவாயில் மற்றும் பின் பகுதியிலுள்ள தூண்கள், சுவர்கள் சிதைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதோடு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பராமரிப்பு இல்லாததால் மாளிகையை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது. அறைகளில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், சோபாக்கள், மெத்தையுடன் கூடிய மரக்கட்டில் உள்ளிட்டவை சிதைந்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் ஆய்வு மாளிகை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

ஆய்வு மாளிகை அருகே உள்ள பாதை வழியாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த சிறுவர்களும், பெரியவர்களும் நடந்து செல் கின்றனர். அசம்பாவிதம் நிகழும் முன் ஆய்வு மாளிகையை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

x