சிவகாசி: நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆருடன் முடிந்து விட்டது. விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரைப் பார்க்க அனைவரும் வருவது இயல்பு. விஜய் சிவகாசி வந்தால் நாங்கள் கூட ஓரமாக நின்று அவரைப் பார்ப்போம். கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேல் பிரச்சாரத்துக்கு வந்தார்.
எம்ஜிஆர் நடிப்பு மூலம் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி, 1957ல் அரசியலுக்கு வந்து 1967ல் எம்எல்ஏ-வாகி, தனிக்கட்சி தொடங்கி 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, ரசிகர்களை பொதுத் தொண்டில் ஈடுபட வைத்து, அரசியலுக்கு வந்து அதன்பின் கட்சி தொடங்கியதால்தான் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அவரைப்போல் ஆகலாம் என அனைவரும் நினைப்பது தவறு. அது நடக்கவே நடக்காது. திமுகவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அதிமுக-வின் தலைமையை ஏற்றால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.