சேலம் - ஈரோடு இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்: நீர்மின் கதவணை பராமரிப்பால் நடவடிக்கை!


சேலம்: எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக, தேக்கி வைத்திருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் சேலம் - ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் கதவணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கதவணைகளில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் 12 நாட்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அப்போது, தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி- ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. தற்போது, கதவணையில் பராமரிப்புப் பணி தொடங்கியுள்ள நிலையில், நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், தண்ணீரின்றி குட்டையாக காட்சியளிக்கிறது. இதனால் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டம் இடையிலான விசைப்படகு போக்குவரத்து 12 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. மேலும் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப் பட்டதால், நீர்மின் கதவணை பாலம் மூலம் இரு சக்கர வாகனத்தில் மட்டும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

பூலாம்பட்டி காவிரி ஆற்றின் கரையில் இருந்து எடப்பாடி நகராட்சி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்யப்படுகிறது. பூலாம்பட்டியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து மோட்டார்கள் மூலமாக தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கும் வரை தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

x