கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தில் செய்யூர் எம்எல்ஏ பாபுவுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மகன் குணசேகரன் (28). இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், உறவினர் ஒருவரின் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று இரவு அருகில் உள்ள விளை நிலத்துக்கு சென்றுள்ளார். அந்த நிலத்தின் அருகே செய்யூர் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏ பாபுவுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. அதில் நெல் பயிரிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதமாகாமல் இருப்பதற்காக, நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.
இந்நிலையில், தண்ணீர் பாய்ச்சுவதற்காக அந்நிலத்தின் அருகே சென்ற குணசேகரன் மின்வேலியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.