சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் ஸ்ரீ ராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சாமியார் வெங்கட சரவணன் என்ற எஸ்.ஏ.ஆர் பிரசன்ன வேங்கடாச்சாரியார் சதுர்வேதி. இவர், அந்த அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலராகவும் இருந்தார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர், சென்னை காவல்துறையில் புகார் மனு அளித்தார். அதில் சதுர்வேதி தன்னுடைய மனைவி, மகளை மயக்கி கடத்தி சதுர்வேதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சதுர்வேதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேபாளத்தில் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சதுர்வேதி தலைமறைவானார். இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2016ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் மீதான பாலியல் வழக்கு விசாரணை எழும்பூர் அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, சதுர்வேதி அடுத்த மாதம் (மே) 23ம் தேதிக்குள் அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் ஆஜராக தவறினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.