தமிழ்வழியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: தூத்துக்குடியில் இலவச ஸ்கேட்டிங் பயிற்சி


படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் மாஸ்டர் ஒருவர் இலவசமாக ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் பி.சுரேஷ் குமார் (37). ஸ்கேட்டிங் மாஸ்டரான இவர், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், தூத்துக்குடி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்றும் பயிற்சி அளிக்கிறார்.

இந்நிலையில் முத்து நகர் கடற்கரை பூங்கா மைதானத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இவர் பயிற்சி அளித்து வருகிறார். பல மாணவர்கள் இலவசமாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுரேஷ்குமார் கூறும்போது, ”முத்து நகர் கடற்கரை பூங்கா ஸ்கேட்டிங் மைதானத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தினமும் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறேன். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் பயிற்சி பெறுகின்றனர். இதில் தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். தனியார் கோச்சிங் சென்டர்களில் ஒரு மாதத்துக்கு ரூ.1,000 வரை கட்டணம் பெறும் நிலையில் நான் இலவசமாக பயிற்சி அளிக்கிறேன்.

மற்ற மாணவர்களிடமும் மிக குறைந்த கட்டணமே வசூல் செய்கிறேன். என்னிடம் இலவச பயிற்சி பெற்ற சில மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். ஏழை, எளிய மாணவர்களும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன் என்றார்.

x