தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் விரைவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி: பயன்கள் என்ன?


தூத்துக்குடி: வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைமுகத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, துறைமுகத்தின் தேவைகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.

இங்கு ரூ.18 கோடி செலவில் 2 மெகாவாட் காற்றாலை, ரூ.1.46 கோடி செலவில் 400 கிலோ வாட் மேற்கூரை சூரிய மின் ஆலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.4.90 கோடி செலவில் ஒரு மெகாவாட் தரைதள சூரிய மின் ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் முனையமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து எடுக்கப்பட்டு திரவ வடிவில் சேமிக்கப்படுகிறது.

இந்த பசுமை ஹைட்ரஜன் எரி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் மின்சார உற்பத்தியிலும் பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப் படுகிறது. பசுமை ஹைட்ரஜனை, அதற்கான பிரத்யேகமான பியூவல் செல்லுக்குள் செலுத்தி, ஹைட்ரஜன் உடைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது. இவ்வாறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது, மாசு ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான பொருளும் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இதனால் இது தூய்மையான எரிசக்தி என கருதப்படுகிறது.

பசுமை ஹைட்ரஜனை சிலிண்டர்களில் நிரப்பி எளிதில் கொண்டு செல்ல முடியும். இதனால் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் அதன் மூலம் மின்சார உற்பத்தியும் முக்கியத்துவம் பெறுகிறது.

சோதனை ஓட்டம்: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, முன்மாதிரி திட்டமாக ரூ.3.87 கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் செயல்முறை ஆலை, உற்பத்தி, சேமிப்பு மற்றும் மின்உற்பத்தி அமைப்பு ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து மிக விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 10 நியூட்டன் மீட்டர் அளவு கொண்ட பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பசுமை ஹைட்ரஜனில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, துறைமுக குடியிருப்புகள், தெருவிளக்குகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்க வ.உ.சி. துறைமுகம் திட்டமிட்டுள்ளது.

மாற்று சக்தி மற்றும் கார்பன் வெளிப்பாடை குறைக்கும் நோக்கத்துடன் வ.உ.சி. துறைமுகம் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தகவலை வ.உ.சி. துறைமுக ஆணையம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

x