பணியின்போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து தூய்மை பணியாளர் மரணம்: மதுரையில் சோகம்


மதுரை: வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார்.

மதுரை நாகனாகுளம் ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (55). மதுரை மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றினார். நேற்று முன்தினம் 5-வது வார்டு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். சேகரித்த குப்பையை தொட்டியில் கொட்டுவதற்கு சென்றபோது, வெயிலின் தாக்கத்தால் திடீரென அவர் மயங்கி விழுந்ததார். இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

சக பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு மணிவேலை அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் மணிவேலின் மனைவி மணி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தில் உயிரிழந்த மணிவேல் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, அவரது குடும்பத்தினர், சக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x