ஜெல்லி மீன்களை கையால் தொட்டால் ஆபத்து: மீன்வளத் துறை எச்சரிக்கை


ராமநாதபுரம்: ஜெல்லி மீன்களை கையால் தொட வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதியில் மீனவர்களின் வலையில் மற்ற மீன்களுடன் ஜெல்லி மீன்களும் சிக்கிக்கொள்ளும். ஜெல்லி மீன்களின் நச்சு தன்மையால் மனிதர்களுக்கு வாந்தி, மயக்கம், அரிப்பு ஏற்படும் என்பதால், கரை திரும்பியதும் மீனவர்கள் வலையில் இருந்து மீன்களை பிரித்து எடுக்கும்போது ஜெல்லி மீன்களை தனியாக எடுத்து கடற்கரையில் வீசி விடுவார்கள்.

தற்போது ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுவதுடன், கடந்த இரண்டு நாட்களாக ராமேசுவரத்தில் உள்ள சேராங்கோட்டை கடற்பகுதியில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இது குறித்து மீன்வளத் துறை மற்றும் மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெல்லி மீன்கள் குறித்து மீன்வளத் துறையினர் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டம் பாஜ் நீரிணை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நாலு மூலை ஜெல்லி, குத்து ஜெல்லி ஆகிய ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மீனவா்கள் மீன் பிடிக்கும் போது, வலையில் சிக்கி மற்ற மீன்களுடன் கலந்திருக்கும் இந்த ஜெல்லி மீனை வெறும் கையால் தொடும்போது, அது கடும் விஷத் தன்மையை உடலில் பாய்ச்சி விடும்.

இதனால், உடல் வேதனை, மூச்சுத் திணறல் ஏற்படும். உடனே மருத்துவா்களை அணுகி சிகிச்சை பெறாவிட்டால் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆகவே வலையில் சிக்கும் ஜெல்லி மீன்களை மீனவர்கள் கைகளால் தொடாமல் விலகி இருக்க வேண்டும் என்றனர்.

x