மதுரை அழகர் கோவில் மலைக்கு செல்ல 4 புதிய பேருந்துகள்: பக்தர்கள் மகிழ்ச்சி


மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயில் மற்றும் ராக்காயி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக தற்போது புதிதாக 4 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் சேகர் பாபு, பி.மூர்த்தி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது போல் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 4 பேருந்துகள் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பக்தர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் அடி வாரத்தில் இருந்து மலைக்குச் செல்ல கட்டணமாக 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கள்ளழகர் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைச்சர்கள், அறங்காவலர் குழு தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் செய்து வருகின்றனர்.

முந்தைய விழாக்களில் சிறு, சிறு சம்பவங்கள் நடந்த நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக கண்காணிப்பு, அதிக அக்கறையோடு அனைத்துப் பணிகளையும் காவல் துறை, வருவாய்த் துறை மாநகராட்சி நிர்வாகம், அறநிலையத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

x