மதுரை: இளைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கி உள்ளதாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வேதனை தெரிவித்தார்.
மதுரை ஆதீன மடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்த மதுரை ஆதீனம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத தீவிரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும். அந்நாட்டை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நேரு காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம்.
இந்தியா எப்போதும் சமாதானத்தைத் தான் விரும்பகிறது. ஆனால் துங்கும் புலியை தூண்டி விட்டால் ஏற்படும் பின்விளைவுகளை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகள் வளர்க்கப்படுகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிராக நதி நீரை நிறுத்துவது சரியான நடவடிக்கைதான். அவர்களுக்கு காற்றுகூட வழங்கக்கூடாது.
இன்றைய இளைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். சினிமா மோகம் காரணமாக கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். நடிகர் விஜய் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகி சவார்கர் குறித்து ராகுல் காந்தி தவறாக பேசியிருக்கக் கூடாது. ராகுல் சின்ன பையன். அவர்கள் ஆட்சியில் தான் ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.