நீலகிரி: கீழ் கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் தேயிலை பறிக்கும் பணிகளுக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். வனப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று வழக்கத்துக்கு மாறாக அசைவற்று கிடந்ததை தொழிலாளர்கள் கண்டனர். உடனடியாக எஸ்டேட் மேலாளர் உதவியுடன், வனத்துறையினருக்கு தொழிலாளர்கள் தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பெண் யானையும், அதனருகே குறை மாதத்தில் பிறந்த குட்டி யானையும் உயிரிழந்து கிடந்தன. முதுமலையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வந்து, சடலங்களை உடற்கூறாய்வு செய்தனர். இறந்த தாய் யானை மற்றும் குட்டியின் உடல் பாகங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, "உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 15 முதல் 20 வயது இருக்கலாம். சுமார் 16 வாரம் கர்ப்பமாக இருந்த இந்த யானை, குறை பிரசவத்தில் குட்டியை ஈன்றுள்ளது. அந்த இடத்திலேயே குட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. யானையின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை. உடற்கூறாய்வு முடிவுகளை வைத்தே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.