புதுச்சேரி: பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
புதுச்சேரி திருபுவனையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது: நாங்கள் திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே, பலர் கேலி பேசுகிறார்கள். கூட்டணிக்காக எந்த கதவையும் நான் திறந்து வைத்திருக்கவில்லை. ஒரே நேரத்தில் 2 அணிகளிலும் பேசும் ராஜதந்திரமும் எனக்குத் தெரியாது. பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது.
நான் இருக்கும் அணி பலவீனப்பட்டால், அது பாஜகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதை உணர்ந்துதான், விஜய் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவைப் புறக்கணித்தேன்.
ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது. சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி பாஜக மட்டும்தான். சாதி வழக்கத்தை எதிர்த்து ஆர்எஸ்எஸ் இயக்கம் என்றைக்காவது போராடியது உண்டா? இவ்வாறு திருமா வளவன் கூறினார்.