அரசு நிலங்களில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்படும் கனிம வளங்கள்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு


ஸ்ரீவில்​லிபுத்​தூர்: அதிகாரிகள் துணையுடன் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் 2023-ல் கல் குவாரி அமைக்கப்பட்டது. இந்த குவாரியால் மேய்ச்சல் நிலம் மற்றும் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியவில்லை என்று கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று கல் குவாரியைப் பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியால் விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் மக்கள் போராட்டங்களை நடத்தியதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்தக் குவாரியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை காரணம் கூறாமல், மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறை தலையிட்டு இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பது, அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்களை எடுப்பது போன்ற விதிமீறல்கள் தொடர்கின்றன. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.

மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிவிட்டு, வசூல் என்ற பெயரில் அத்துமீறி பெண்களைத் துன்புறுத்துவதால் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. கடன் வழங்கிவிட்டு கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

பட்டாசு தொழிலில் பாதுகாப்பைப் பலப்படுத்தி, உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும். பட்டாசு விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் சிவகாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x