சென்னை: மத்திய அரசுப் பணிகளில் சேருவோருக்கு தமிழகத்தில் காவல் துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் சேரும் தமிழகத்தை சேர்ந்த பணியாளர்களின் நடத்தை குறித்த காவல் துறை சான்று பெறுவதற்கு மாதக் கணக்கில் தாமதம் ஏற்படுவதால், அவர்களால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும்கூட பணிநிலைப்பும், ஊதிய உயர்வும் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய இத்தகைய அணுகுமுறையை அனுமதிக்க முடியாது. மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேருவோருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டு காலம் தகுதிகாண் பருவமாக கருதப்பட்டும். இந்தக் காலத்தில் அவர்களின் நடத்தை குறித்து அவர்கள் வாழும் மாநிலங்களின் காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால், உரிய காலத்தில் அந்த அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆனால், தமிழகத்தில் காவல் துறை சரிபார்ப்பு அறிக்கையை தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஆட்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தில் பணியாற்றும் ஒருவரின் நடத்தை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், அவரது தகுதிகாண் காலம் மேலும் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, அவருக்கு பணிநிலைப்பு வழங்கப்படுவது தாமதமானது.
காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமானப் பணியாகும்.அதில் செய்யப்படும் தாமதத்தால் பணியாளர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் களைய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல்மயமாக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.