மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்பி, மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், போக்குவரத்து துணை ஆணையர் வனிதா, வெங்கடேசன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது, சித்திரை திருவிழா காண வரும் பக்தர்களுக்கு பல இடங்களில் குடிநீர் வசதி, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர்கள் கூறுகையில், "இந்தாண்டு சித்திரை திருவிழாவை எந்தளவு சிறப்பாக நடத்த முடியுமோ, அந்தளவு சிறப்பாக நடத்த திட்டமிட்டு, அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு சித்திரை திருவிழா ஏற்பாடுகள் கூடுதல் கவனத்துடன் நடைபெற்று வருகிறது. மேம்பாலம் உட்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை மனதில் வைத்து விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு கியூஆர் கோடுடன் ஆர்எப்ஐடி பாஸ் வழங்கப்படும். கோயிலுக்கு வெளியே முந்தைய சித்திரை திருவிழாவின் அனுபவங்கள் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்படும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் திறக்கப்படும்" இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.