ஊட்டி: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத கட்சிக்கு தேர்தலில் வாக்களிக்க கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில குழு கூட்டம் ஊட்டியில் கடந்த இரு நாட்கள் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். படுக தேச விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் மஞ்சை வி.மோகன் வரவேற்றார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் கே. ராமகவுண்டர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத கட்சிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க கூடாது என்றும், கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறும் போது, “இரு நாள் மாநிலக்குழு கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் ஒட்டு மொத்த விளை நிலங்களையும் விவசாயிகள் ஒப்புதலின்றி கைப்பற்ற கார்ப்ரேட்டுகளுக்கு அனுமதி அளிக்கிறது. நீர் ஆதாரங்களை கார்ப்ரேட் நிறுவனங்கள் அபகரித்து கொள்ளவும் அவர்கள் விருப்பத்துக்கு பயன்படுத்த இந்த சட்டம் வழிவகுக்கிறது. இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் சமித்த கிசான் மோர்ச்சா போராடி வருகிறது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை போராட்டக்குழுவோடு மத்திய அமைச்சர்கள் நடத்தினர். 4வது கட்ட பேச்சுவார்த்தை மே 4ம் தேதி நடக்கிறது. இதில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு என ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். கொடைக்கானல், ஊட்டி, ஏற்பாடு மலை பகுதிகளில் இயற்கை சூழலை பாதுகாப்பதோடு, மலைப் பகுதிகளில் குடியிருப்பு மனை மற்றும் வேளாண் நிலங்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும்.
நீலகிரி பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாவட்டத்துக்கே அச்சுறுத்தலாக உள்ள சில்ஹல்லா நீர் மின் திட்டத்தை அரசு கை விட வேண்டும். நீலகிரி மாவட்டத்துக்கு என் மாவட்ட விவசாயத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும். படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத கட்சிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க கூடாது என்றும், கோரிக்கைகளை நிறைவேற்ற உத்திரவாதம் அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டது” என்றார். கூட்டத்தில், பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.