தஞ்சை: பசுமைப் புரட்சிக்கு பிறகு அதிகளவில் வேளாண்மையில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தது என நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா தொடங்கியது. 2-ம் நாள் விழாவை நேற்று தொடங்கி வைத்து சி.மகேந்திரன் பேசியது: பாரம்பரிய, இயற்கையாக மேற்கொள்ளப்பட்டு வந்த உழவுத் தொழில், ரசாயனப் பயன்பாட்டால் அழிவதைக் கண்டு வேதனைப் பட்டு தான், நம்மாழ்வார் தனது பணியை விட்டு வெளியேறி, இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு புற்று நோய் அதிகரித்ததற்கு ரசாயன உரங்கள் பயன்பாடு தான் காரணம். மகசூலை அதிகரிக்கும் நோக்கில் உரங்களைப் பயன்படுத்துவதால் புற்று நோய் உருவாகிறது. இதனால், நிலம் அழிந்து வருகிறது. ரசாயனப் பயன்பாட்டுக்கு எதிராக நம்மாழ்வார் நடத்தியது முதல் புரட்சி என்றால், நாம் 2வது புரட்சி நடத்த வேண்டியிருக்கிறது.
மக்கள் மனங்களில் மாற்றம், எளிய மக்களின் மாற்றம், கொள்ளையில் இருந்து விடுபடக்கூடிய மாற்றம் ஆகியவை தான் புரட்சி. எனவே, மக்களின் சிந்தனை மாற வேண்டும் என்றார்.
விழாவில் தி.பால தண்டாயுதம், பேராசிரியர்கள் ஜவகர்நேசன், தீபமாலா, முற்போக்கு பெண்கள் சிந்தனையாளர் ரோகினி, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி, எஸ்.செந்தூர் பாரி உள்ளிட்டோர் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் பேசினர். இந்த விழா இன்று (ஏப்.27) நிறைவடைகிறது.