ராமநாதபுரம்: சோழர் கால கடற்கரை கோயிலான பாசி அம்மன் கோயிலை புனரமைக்க கோரிய வழக்கில் அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த கலந்தர் ஆசிக், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாசிபட்டினம் கிராமத்தில், கடற்கரை அருகே சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாசி அம்மன் கோயில் மற்றும் மண்டபம் உள்ளது. இக்கோயில் தற்போது எந்தவித பராமரிப்பும் பாதுகாப்புமின்றி காணப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோயிலை பாதுகாத்து, புனரமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, மனுதாரரின் மனுவை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பரிசீலித்து 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது.