சிவகங்கை: அரசு மருத்துவமனையில் 8 மாதங்களை கடந்தும் ‘எக்கோ’ மையத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இம்மையத்தில் பணிபுரிய சென்னையிலிருந்து இதய மருத்துவரை பணியிலிருந்து விடுவிக்க ஒரு மாதத்துக்கு மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள ‘எக்கோ’ மையத்தில் கர்ப்பிணிகள், இதய நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இங்கு பணிபுரிந்த இதய மருத்துவருக்கு, வாரத்தில் 3 நாட்கள் மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் மாற்றுப் பணி வழங்கப் பட்டது. இதனால் அவர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் சிவகங்கையில் ‘எக்கோ’ பரிசோதனை செய்தார்.
இதனால் புறநோயாளிகள் வாரக்கணக்கில் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், பரிசோதனைக்கு வருவோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனிடையே, அந்த மருத்துவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார். அதன் பின்பு கடந்த 8 மாதங்களாக் ‘எக்கோ’ மையம் மூடப்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் ‘எக்கோ’ பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். சிலர் கட்டணம் கொடுத்து தனியாரிடம் பரிசோதனை செய்து வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் உடனடியாக இதய மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இதய மருத்துவர் ஒருவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த பணிமாறுதல் கலந்தாய்வில் சிவகங்கை அரசு மருத்துவமனையை தேர்வு செய்தார். ஆனால், அவரை அங்கிருந்து விடுவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் ‘எக்கோ’ மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
இது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் விசாரித்தபோது, ‘இங்குள்ள மருத்துவர்கள் சிலருக்கு பயிற்சி அளித்து, கடந்த 2 மாதங்களாக அவசர நோயாளிகளுக்கு மட்டும் ‘எக்கோ’ பரிசோதனை செய்து வருகிறோம். விரைவில் இதய மருத்துவர் வந்துவிடுவார்’ என்றனர்.