திருப்பத்தூர் அருகே ஊத்தா மீன்பிடித் திருவிழா: மீன்களை அள்ளிய கிராம மக்கள்


சிவகங்கை: திருப்பத்தூர் அருகே ஊத்தா முறை மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி மீன்களை பிடித்தனர்.

தமிழகத்தில் கண்மாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள 2-வது மாவட்டமாக சிவகங்கை உள்ளது. கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. தற்போது கோடை காலம் என்பதால் கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதையடுத்து கிராம மக்கள் தங்களது கிராமங்களில் மீன்பிடித் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று திருப்பத்தூர் அருகே இரணியூரில் உள்ள கடப்பான் கண்மாயில் ஊத்தா முறையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. இதில் ஊத்தா கூடைகள் மூலமாக மட்டுமே மீன்களை பிடிக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. நேற்று அதிகாலையிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊத்தா கூடைகளுடன் கண்மாயில் குவிந்தனர்.

வழிபாடு முடிந்து அனுமதி அளித்ததும், கிராம மக்கள் மீன்களை பிடித்தனர். கட்லா, விரால், கெண்டை, ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்தனர். எதிர்பார்த்த மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

x