திருவாரூர்: மன்னார்குடியைச் சேர்ந்தவர் லெனின் (35). பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளரான இவர், தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அண்மையில் கேலிச் சித்திரத்தை பதிவேற்றியுள்ளார்.
இது குறித்து மன்னார்குடி நகர விஏஓ ஜெரால்ட் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை பகுதியில் நேற்று லெனினை கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து தகவலறிந்த பாஜகவினர், மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் பாஜக மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல, மன்னார்குடியில் திருவாரூர் சாலையிலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டு, தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து போலீஸார் சென்று 2 இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 80 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனால், மன்னார்குடியில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.