மீண்டும் தள்ளி போகிறது பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட தொடக்க விழா: காரணம் என்ன?


மதுரை: முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி பரிசோதனை ஓட்டம் முடித்த பிறகே, இந்த திட்டத்தை தொடங்கி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனால், மே மாதம் முதல் வாரம் முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்த இந்த திட்டம் மீண்டும் ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகிறது.

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு பரிசோதனை முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இன்னும் கூடுதலாக 20 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியை நிறைவு செய்து மே முதல் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் இத்திட்ட தொடங்க விழா ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”எந்த ஒரு குடிநீர் திட்டமும் முழுமையாக நிறைவுபெற்று தொடங்கி வைக்கப்பட்டதாக வரலாறு இல்லை. அந்த அடிப்படையிலே 40 முதல் 50 வார்டுகளுக்கு இத்திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்தது. மீதமுள்ள வார்டுகளில் நடக்கும் பணிகளை விரைவுபடுத்தி வரும் செப்டம்பருக்குள் 100 வார்டுகளிலும் நிறைவு செய்ய திட்டமிடப் பட்டிருந்தது. ஏனெனில் புதிய குடிநீர் குழாய்கள் கொடுக்கும் பணியை முடிக்க வரும் டிசம்பர் வரை காலக்கெடு இருந்தது.

ஆனால், இந்த திட்டத்தை தொடங்கியது அதிமுக ஆட்சியில் என்பதால் அக்கட்சியினர் 100 வார்டுகளிலும் ஒன்றாகதொடங்கி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால், குறைவான வார்டுகளில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தால் விமர்சனம் வரும் என்பதால் தற்போது முழுமையாக இந்த திட்டத்தை முடிக்கும் பணிகளை விரைவுபடுத்த மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது. முன்னாள் ஆணையர் தினேஷ்குமார் முதல் தற்போது புதிதாக வந்துள்ள சித்ரா வரை, இத்திட்டப் பணிகளை தினமும் விரைவுபடுத்தியதாலேயே பணிகள் இந்த அளவுக்கு நடந்துள்ளன’’ என்றனர்.

‘ஸ்கேடா’ முறையில் கண்காணிப்பு: கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து 120 கி.மீ. தொலைவை கடந்து மதுரைக்கு குடிநீர் வருகிறது. இடையில் பண்ணைப் பட்டியில் சுத்திகரிக்கப் படுகிறது. அதனால், லோயர் கேம்ப் முதல் மதுரை வரை இந்த குடிநீர் வரும் குழாய்களில் எவ்வளவு அழுத்தத்துடன் குடிநீர் வருகிறது என்பதை ஸ்கேடா என்ற முறையில் கணிணியில் ஆன்லைன் முறையிலேயே கண்காணிக்கலாம். எங்காவது அழுத்தம் குறைந்தால் அங்கு பிரச்சினை உள்ளதை கண்டறியலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

x