அண்ணனை இப்படி தவிக்க விட்டு ஏன் சென்றாய்? - இயக்குநர் நாகேந்திரன் மறைவுக்கு சீமான் உருக்கமான இரங்கல்


சென்னை: இயக்குநர் நாகேந்திரன் மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினர், உறவினர்கள், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கின்றேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திரைத்துறையில் நான் இயக்குநரான காலம் தொடங்கி இன்று வரை என் நிழலாக, உற்ற துணையாக இருந்த என் பேரன்பிற்குரிய தம்பி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான என் ஆருயிர் இளவல் நாகேந்திரன் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் பணியாற்றிய காலத்தில், அண்ணன்-தம்பியாக, ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களைப் போல நானும்,தம்பி தேவாவும், தம்பி நாகேந்திரனும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி, ஒன்றாக உணவருந்தி, அன்பாய் பேசி சிரித்து மகிழ்ந்தது, அவனது வாகனத்திலேயே சென்னை முழுவதையும் வலம் வந்தது என பசுமையான நினைவுகள் யாவும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

மரணிப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் என்னுடைய அலைபேசிக்கு வந்துள்ள அவனுடைய தவறிய அழைப்பில், என்ன சொல்ல நினைத்திருப்பானோ? என்று எண்ணி எண்ணி நெஞ்சம் மருகுகிறேன்.

பெற்றெடுத்துப் பேணிவளர்த்த பெரும் பாசத்திற்குரிய தந்தையைப் பறிகொடுத்துவிட்டு, என்னைப் பார்த்தவுடன் கதறி அழும் என் அன்பு மகள்களுக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். நானே கலங்கி நிற்கும் வேளையில் என் அப்பா ராஜூ, அம்மா பாண்டியம்மாள், தம்பி தேவா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியாத கையறு நிலையில் நிற்கிறேன்.

என் அன்புத்தம்பி நாகேந்திரா..!

இனி, நீ இல்லை..!
என்ற உண்மையை ஏற்க மனம் மறுக்கிறது.

அப்படி என்னடா தம்பி... அவசரம்?
அண்ணனை இப்படி தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டாய்..!

எந்த முடிவையும் என்னிடத்தில் சொல்லிவிட்டு தான் எடுப்பாய்!
இந்த முடிவை மட்டும் ஏன் சொல்லாமலே எடுத்தாயடா..?

உன் நினைவை மட்டும் தந்துவிட்டு,
நீ... நீண்ட தூரம் ஏன் சென்றாய்..?

துன்பத்தை எனக்குத் தந்துவிட்டு,
நீ ஏனடா தூங்கிவிட்டாய்..?

சில நாட்களாக நீ என்னை கவனிக்கவில்லை;
நான் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை!
ஆனால், நீ உன்னை கவனித்துக் கொள்வாய்
என்ற நம்பிக்கையோடு இருந்தேனடா...
ஏனடா இப்படி ஏமாற்றிவிட்டு சென்று விட்டாய்..?

உன் மறைவால் உண்டான என் உள்ளத் துயரங்களை
எங்கே சென்று புலம்பி தீர்ப்பது?

உன் நிரந்தர பிரிவு தரும் மனக்காயங்களை ஆற்றப்போவது எப்படி?

எல்லோருக்கும் ஆறுதலாக நான் நிற்கிறேன்!
உன் அண்ணன் எனக்கு யாரடா ஆறுதல் சொல்லுவார்?

அன்புத்தம்பி நாகேந்திரன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினர், உறவினர்கள், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x