கட்டிட அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு: திருப்பூரில் 7 ஊராட்சி செயலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு


ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்

திருப்பூர்: கட்டிட அனுமதி வழங்காமல் இழுத்தடித்ததாக எழுந்த புகாரின்பேரில், திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி செயலர்களை பணியில் இருந்து விடுவித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024 - 25ம் ஆண்டு 10 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட மற்றும் மேற்பட்ட கட்டிட அனுமதிக்காக இணைய தளம் வழியாக வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு, உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் சில ஊராட்சி செயலர்கள் 30 நாட்கள் ஆகியும், அனுமதி வழங்காமல் நிலுவையில் விண்ணப்பங்களை வைத்திருப்பதாக புகார் எழுந்தது. ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அதில், அவிநாசி ஒன்றியத்தில் புதுப்பாளையம் ஊராட்சி, குண்டடம் ஒன்றியத்தில் சூரியநல்லூர் ஊராட்சி, பல்லடம் ஒன்றியத்தில் கணபதி பாளையம் ஊராட்சி, பொங்கலூர் ஒன்றியத்தில் தெற்கு அவிநாசி பாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி ஆகிய 7 ஊராட்சிகளில் பணியாற்றிய ஊராட்சி செயலர்கள் உரிய காலத்துக்குள் கட்டிட அனுமதி வழங்காமல், விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருந்தது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. அவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க மாவட்ட மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கூறும்போது, ‘‘உரிய நாட்களுக்குள் பொதுமக்களுக்கு கட்டிட அனுமதி வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தி, திருப்பூர் மாவட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்திய 7 ஊராட்சி செயலர்களை பணியில் இருந்து விடுவிக்கிறேன். அவர்களுக்கு பதிலாக தகுதியான ஊராட்சி செயலர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து வரியினங்களை வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்கண்ட ஊராட்சி செயலர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்து, அதன் அறிக்கையை தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.

x